Wednesday, February 26, 2014

கத்தியின்றி ரத்தமின்றி வெட்டும் மனிதர்

அண்மையில் நான் மதுரை சென்றிருந்த போது ஓய்வு பெற்ற தணிக்கைக் குழு உறுப்பினர் திரு. தியாகராஜன்  அவர்களை சந்திக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அவர் திரைப்படத்  தணிக்கை சம்பந்தமாக  நாம் அறியாத பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றை இப்போது காண்போம். தணிக்கைக் குழுவில் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்  நிரந்தரமாகவும், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், கலைத்துறையினர் ஆகியோர் தற்காலிகமாகவும் நியமிக்கப்படுவர். இக் குழுவுக்கென்று பல சட்டங்களும் விதிமுறைகளும் உண்டு. அவற்றை மாற்றவோ மீறவோ எவராலும் முடியாது. இதனால் தான் தணிக்கைக் குழுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதால் எதுவித பயனும் ஏற்படுவதில்லை. அருவருப்பான வசனங்களையும், அளவுக்கு மீறிய ஆபாசம், மோசமான வன்முறை தேசவிரோதச் செயல், குழந்தைகளின்  மனத்தைக் காயப்படுத்தல், பெண்களைக் கேவலப்படுத்தல், உடல் ஊனமுற்றோரைப் புண்படுத்தல், தனிப்பட்ட அவதூறுகள், குறிப்பிட்ட ஜாதி-மத-இன குழுவினரைப் புண் படுத்தல், பயங்கரமான  படுகொலைகள், ஆகியவை  சம்பந்தப்பட்ட   காட்சிகளையும், வசனங்களையும்  தணிக்கை செய்யுமாறு தணிக்கை விதிமுறைகள் கூறுகின்றன. மேலும் திரைப்படக் காட்சிகள் இந்திய அரசின் இறையாண்மை, அரசியல், பண்பாடு, நீதிமன்றங்கள், சட்டங்கள்  ஆகியவற்றை மீறாமல் உள்ளனவா என்றும் கண்காணிக்கப்படுகிறது.
                                                         ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய 4 உறுப்பினர்களை வரச் சொல்லி அவர்களுக்கு தனித்தனியே அழைப்பு அனுப்பப்படும். திரையரங்கிற்கு வந்து சேரும் வரை மற்ற உறுப்பினர்கள் யார் என்பது  அவர்களுக்கே தெரியாது. படம் தொடங்குவதற்கு 5 நிமிடங்கள் வரை என்ன திரைப்படம் என்று கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு  இல்லை. இயக்குனரும் தயாரிப்பாளரும் அவசியம்  திரையரங்கிற்கு வெளியே காத்திருக்க வேண்டும்.படம் தொடங்கும் போது படத்தின் பெயர், நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் பற்றிய  விபரங்களும் தணிக்கை விதிமுறைகள் அடங்கிய புத்தகமும், CUT SHEET ம் கொடுக்கப்படும். 4 உறுப்பினர்களும் நீக்க வேண்டிய காட்சிகளையும் வசனங்களையும் CUT SHEET ல் குறித்துக் கொண்டே வருவார்கள்.  இவர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாக தனித்தனியே அமர்ந்திருப்பதால் ஒருவர் குறிக்கும் விபரங்கள் மற்றவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.                                                                                                                                                                                    பின்னர் அனைவரும் ஒரு அறையில் கூடி தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் காரணங்களோடு  விவாதிப்பார்கள். சர்ச்சை இல்லை என்றால் தயாரிப்பாளரை அழைத்து சான்றிதழை வழங்கி விடுவார்கள். சர்ச்சை இருந்தால் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் அழைத்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். படத்தின் கதைக்கும், தொடர்புக்கும் அக்காட்சி அவசியம் என்றும், தவறான உள் நோக்கத்தோடு   அமைக்கப்படவில்லை என்றும் தயாரிப்பாளர் வாதாடுவதுண்டு. அச்சந்தர்ப்பத்தில் அக்காட்சிகளை தணிக்கைக் குழு உறுப்பினர்கள்  மறு பரிசீலனை செய்வார்கள்.அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டால் மாத்திரமே அவை அனுமதிக்கப்படும். நீக்கப்பட்ட காட்சிகளுக்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டால் அவை இடம் பெற்ற பொசிட்டிவ் மற்றும் நெகடிவ் படச் சுருள்களை  தணிக்கை அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு படத்தின் DVD யும் வசன புத்தகமும் ( CENSOR SCRIPT) சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.  உறுப்பினர்களின் பொதுவான கருத்தின் அடிப்படையில் U (அனைவரும் பார்க்கலாம்  A (வயது வந்தவர்களுக்கு மட்டும்)  UA ( குழந்தைகள் பெற்றோருடன் பார்க்க அனுமதி) S (மருத்துவர்கள் போன்ற விசேட பிரிவினருக்கு) ஆகிய பிரிவுகளில் எது என்று முடிவு செய்யப்படும். நீக்கப்பட்ட காட்சிகளுக்கு தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளா விட்டால் சென்னையில் உள்ள தணிக்கைக் சபையின் மறு பரிசீலனைக் குழுவுக்கு திரைப்படம் திரையிடப்படும். அவர்கள் சரி என்றால் சான்றிதழ் வழங்கப் படும். ஆனால் அவர்களும் ஆட்சேபணை  தெரிவித்தால் புது டில்லி யில் உள்ள TRIBUNAL குழுவுக்கு திரைப்படம் திரையிடப்படும். அவர்களுடைய முடிவே இறுதியானது, என்றார் திரு. தியாகராஜன்
                                                 இன்றைய  பல திரைப்படங்கள் தணிக்கைக் குழுவால் பார்க்கப்பட்டதா   என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஆபாசமும் வன்முறையும் நிறைந்து காணப் படுகின்றனவே என்று அவரிடம் கேட்டதற்கு சிரித்த திரு தியாகராஜன், கதையின் தொடர்பு பாதிக்கப் படக்கூடாது  என்ற அடிப்படையில் அனுமதிக்கப் பட்ட  ஒரு சில காட்சிகளையே  நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எங்களால் பெரும்பாலான காட்சிகள் வெட்டி எறியப்பட்டதை நீங்கள் அறிந்திருக்க  வாய்ப்பில்லை. பெரும் செலவில் எடுக்கப்பட்ட  எத்தனையோ   காட்சிகளை நாங்கள் நீக்கியிருக்கின்றோம். வேறு வழியில்லை. நாங்கள் அனுமதி மறுக்கும் சில காட்சிகளை  புது டில்லி TRIBUNAL குழுவினர் அனுமதித்த கதைகளும் உண்டு என்று விளக்கினார்.
வெட்டப்பட்ட காட்சிகளை திருட்டுத்தனமாக இணைத்தால் என்ன நடக்கும்     என்று அவரிடம் வினவிய போது 3 ஆண்டுகள் சிறைத்  தண்டனை  அல்லது ஒரு லட்சம்  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும், என்றார். சில திரைப்படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளனவே எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இவற்றை நீக்கினால் நாங்கள் இந்த அர்த்தத்தில் எழுதவில்லை நீங்கள் தான் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று இயக்குனர்கள்  வாதாடுவர். இவற்றை டப்பிங் இல் மாற்றிவிடும் படி வேண்டுகோள்  விடுத்தாலும் அவர்கள் கேட்பதில்லை. ஆனால் மிக மோசமான இரட்டை அர்த்த வசனங்களை நாம் அனுமதிப்பதில்லை.  எங்களாலேயே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நுணுக்கமாக எழுதப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் இடம் பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு, என்றார். 
நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டதற்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எந்த ஒரு நடிகருக்கும் ரசிகராக இருப்பது கூடாது என்ற எண்ணம் கொண்டவன்  நான். அப்போது தான் பாரபட்சம் இல்லாமல் இங்கே பணியாற்ற முடியும். ஆனால் சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்கு மிகவும்  பிடிக்கும்.           தமிழனாய்ப்  பிறந்த எனக்கு  அவரது நடிப்பு பிடிக்காமல் இருக்க முடியுமா? என்றார் திரு.தியாகராஜன். இவருடன் உரையாடி முடித்ததும் என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்..இந்தியாவிலும் இலங்கையிலும்  உள்ள  ஜாதி-மத-இன வெறியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கண்டிப்பு நிறைந்த தணிக்கைக் குழு ஒன்றை நியமித்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்...?!  ஆனாலும் இது கொஞ்சம் பேராசை தான்...!





1 comment:

  1. Very interesting Dhaya. . I never knew this side of Cinema world. Thanks for sharing

    ReplyDelete