Wednesday, September 19, 2012

உனது கற்பனைக்கும் ஒரு அளவே இல்லையா ...?

குழந்தைகளின் உலகம் மிகவும் அழகானது. அற்புதமானது. கொண்டாட்டமானது. மேலும் அவ்வுலகம்  அதீதமான   கற்பனைகளையும் கேள்விகளையும் சந்தேகங்களையும் உள்ளடக்கியது.இவ்விடயம்  அனைத்து தலைமுறைகளுக்கும் பொருந்தும் எனலாம் . எனது இரண்டாவது மகள் தருணிஷா கேட்ட ''கடவுளுக்குக் காய்ச்சல் வந்தால் என்ன செய்வார்''  என்ற கேள்வி ஒரு சிறிய உதாரணம் தான். இது போல் எத்தனை லட்சம் குழந்தைகளுக்கு எத்தனை கோடி கேள்விகள் எழும்பியிருக்கும்.. ? சிறுவயதில் என் மனதிலும் எத்தனையோ கற்பனைகள்  கேள்விகள் சந்தேகங்கள் எழும்பியிருக்கின்றன. அவற்றில் நினைவில் இருக்கும் ஒரு சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இவற்றில் ஒரு சில நகைச்சுவையாக இருக்கலாம். ஒரு சில  முட்டாள்தனமாகக் கூட  இருக்கலாம்.  ஆனால் அவை  அனைத்தும் நான் குழந்தையாக அல்லது சிறுவனாக இருந்த பொது இயல்பாக ஏற்பட்டவையே.. அந்தக் கற்பனைகள் இதோ....
1) இந்தியா செல்லும் விமானம் வானத்தில் பறப்பதால் இந்தியா வானத்தில் இருக்கிறது.
2) சிங்கம் காட்டுக்கே ராஜா என்பதால் அது கிரீடம் உட்பட ஒரு அரசன் அணியும்  அனைத்து அணிகலன்களையும் அணிந்திருக்கும்.
3) ''மரதன் ஓட்டம்'' திரு. மரதன் என்பவருடைய நினைவாக நடைபெறுகிறது. (இலங்கையிலுள்ள பத்திரிகைகள் MARATHON RACE ஐ ''மரதன் ஓட்டம்'' என்று        தமிழில் குறிப்பிடுவது வழக்கம்.)
4)பூமி உருண்டையாக இருப்பதால் பூமியின் அடிப்பகுதியில் வசிப்பவர்கள் தலைகீழாகவே வாழ்க்கை நடத்துவார்கள்.                                                                           5)தேர்தல் என்றால் ஒரு பெரிய தேரை பலர் சேர்ந்து தள்ளுவார்கள். (தேர் +தள்ளு =தேர்தல்.)
6 )கறுப்புப் பணம் என்பது முழுமையாக கறுப்பு நிறத்தில் அச்சடிக்கப் பட்ட பணம்.
7)ஏழைகளுக்கும் பிச்சைக்காரர்களுக்கும்  பணத்தை லட்சக்கணக்கில் அச்சடித்துக்  கொடுத்து விட்டால் அவர்கள் பணக்காரர்கள் ஆகி  விடுவார்கள் தானே...?என் அப்படி செய்வதில்லை...?
8) MAY DAY என்றால் அது ''மேடை'' என்ற தமிழ்ச் சொல்லைக் குறிக்கிறது (MAY DAY என்றொரு  தினம் இருப்பதே அப்போது எனக்குத் தெரியாது)                               9) மின்னலைப் பார்த்த அடுத்த நொடியில் கண்கள் குருடாகிவிடும். (எனது அத்தை திருமதி.ஜெயலட்சுமி மனோகரன் சிறு வயதில்  இப்படி பயமுறுத்தியது  என் மனதில் ஆழமாகப்  பதிந்து  விட்டதால் இன்றும் நான் மின்னலை நேரடியாகப் பார்ப்பதே  இல்லை)
10) ராமன் எத்தனை ராமனடி திரைப்படத்தில் இடம் பெற்ற ''சித்திரை மாதம் பௌர்ணமி நேரம்'' என்ற பாடலைப் பாடியவர் எனது அத்தையான திருமதி பிரேமா கந்தசாமி (உண்மையில் பாடியவர் பி சுசீலா)
11)மயில் மனிதர்களின் கண்களைக்  கொத்தும் குணம் கொண்டது (ஒரு பழைய பக்தித் திரைப்படத்தில் கடவுள் மயில் முலமாக ஒரு நடிகருக்கு கண்களைக் கொத்தி தண்டனை வழங்குவார். அதை உண்மை என்று நம்பி விட்டேன். )
12) CARNIVAL  என்பது ஒரு தமிழ்ச்சொல். (காணி + வேல் = CARNIVAL)
13) '' அவள் பெரிய பெண் ஆகிவிட்டாள்'' என்று வீட்டில்  பெரியோர்கள் பேசிகொள்வார்கள். அப்படி என்றால் 3 அடி உயரமான ஒரு பெண் திடீரென்று  5 அடி உயரமாக வளர்ந்து விட்டாள்.
14 ) முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி அபிரகாம் லிங்கன் ஒரு தமிழர். (அவரது பெயர் முத்துலிங்கம் தர்மலிங்கம் போலவே இருப்பதால்)
15 ) மறைந்த முன்னாள் கத்தோலிக்க மதத் தலைவர் போப் 2 வது ஜோன் பால் ஒரு தமிழர்.(தமிழில் இவரை அருளப்பர் சின்னப்பர் என்று குறிப்பிடுவதால் )
16 )முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியும் இலங்கை வானொலி செய்தி வாசிப்பாளர் ''சற்சொருபவதி'' யும் ஒரே நபர் தான். ( இந்திரா காந்தியின் முகத்தையே சற்சொருபவதியின்  முகமாக அவரது குரல் எனது  கற்பனையில் படமாகக் கொண்டு வந்ததால்)
17 ) தனது வேட்டியையே ''வடி'' கட்டியாகப்  பயன்படுத்துவதால் தான் எமது பதுளைக் கடையின் முன்னாள் மேனேஜர் திரு ''வடி''வேல் அவர்களுக்கு அந்தப்  பெயர் வந்தது.
18 ) இராமாயணம் மகாபாரதம் ஆகிய  காப்பியங்கள்  நான் படித்த  பண்டாரவளை செந்.தொமஸ் பாடசாலையிலும் அதனைச் சுற்றியுள்ள காடுகளிலும் மலைகளிலும்  இடம்  பெற்றது. ( அந்தப் பாடசாலை நூலகத்தில்  இந்த இரு காப்பியங்களையும் படித்ததால்)                                                                         19)அசுரர்களோடு போர் புரிந்த தேவர்கள் தான், முக்குலத்தோர் இனத்தைச்  சேர்ந்த தேவர்களாகப் பிறந்துள்ளனர்.
 
நிறைவு பெற்றது எனது குழந்தைக் கற்பனைகள் .....நன்றி  நண்பர்களே.... மீண்டும் சிந்திப்போம்.....விரைவில்.......!