Tuesday, April 15, 2014

எந்திரவீரன் எனும் மந்திரக்காரன்

தேவைகளும் அழுத்தங்களும் உருவாகும் போது புதிய பாதைகளுக்கான கதவுகளும் திறக்கப்படும் என்பதே விதியாகும். விஞ்ஞானக்கண்டு                     பிடிப்புகளுக்கும் இது பொருந்தும். அமெரிக்க இரட்டைக் கோபுரம் தகர்க்கப்படுவதை ''பரமக்குடி''  முத்துப்பாண்டியும், ''பதுளை நகர்'' ரட்னாயக்கவும் உடனடியாகப் பார்க்க உதவியது இந்த விஞ்ஞானக் கண்டு பிடிப்புக்களே. ஆனால் இந்த விஞ்ஞானம் போர் என்ற அபாயகரமான விடயத்துக்குள்ளும்  புகுந்து விட்டது தான் சோகமான விடயம். தவிர்க்க முடியாததும் கூட. ஆம்.. அமெரிக்கா 2019ம் அண்டு அளவில் தனது படை வீரர்களின் தொகையை வெகுவாகக் குறைத்து ரோபோ வீரர்களை போருக்கு அமர்த்துவது பற்றி அறிவித்துள்ளது.
இன்றைய உலக வரைபடமே அமெரிக்கா  போன்ற ஆதிக்க சக்திகளின் பேனாவால் வரையப்பட்டுள்ளது என்று கூறலாம். இவர்களின் நோக்கமே உலக நாடுகளை வளைத்து அவற்றின் செல்வங்களை முடியும் வரை அள்ளுவது தான். என்னதான் பெரும் பணக்கார நாடாக இருந்தாலும் இராணுவ பலம் இல்லாவிட்டால் எல்லாமே பூஜ்யம் தான் என்பதும் இராணுவ பலத்தின் மூலம் கிடைக்கும் அங்கீகாரமே பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியம்   என்பதும் அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு நன்கு தெரியும். ஆனால் இவ் விடயத்தில் இவர்களுக்குப்  பெரும் தலைவலியாக இருப்பது உயிர் இழப்புக்கள் தான். சாதாரண  குடி மக்களின் உயிர் பற்றி இவர்களுக்கு என்ன அக்கறை இருக்க முடியும்..? நான் கூறுவது இராணுவ வீரர்களின் உயிர் இழப்புக்களே. முக்கியமாக ஆப்கானிஸ்தான், வியட்நாம்,ஈராக் ஆகிய போர்களில் அமெரிக்க இழந்த உயிர்கள் ஏராளம் ஏராளம்.
                                  இப்படிப்பட்ட நிலையில் சில காலம் முன்பு கண்டுபிடிக்கப் பட்ட ''ஆளில்லாத - அதாவது விமானிகள் இல்லாத விமானங்கள்'' இவர்களின் தலைவலியைக்  கொஞ்சம் குறைத்தன  என்று கூறலாம். நாடுகளின் வான் பரப்பு எல்லை, இறைமை எதைப் பற்றியும் கவலைப்படாமல் நுழைந்து   தாக்கும் சக்தி கொண்டவை தான் இவை.விமானிகள் கைது, விமானிகள் மரணம், விமானிகளைக் காணவில்லை போன்ற சங்கடங்கள் எதுவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்த இவர்கள் மேலும் ரூம் போட்டு யோசித்ததில் நிச்சயம் TERMINATOR (1984) ஆங்கிலப் படம் பற்றி சிந்தித்திருக்க வேண்டும். நான் மதுரை நகரில்  டிக்கட் கிடைக்காமல் வீடு திரும்பிய ஒரே ஆங்கிலப் படம் இது தான். குண்டு வைத்தாலும், துப்பாக்கியால் துளைத்தாலும், நெருப்பு வைத்தாலும் மீண்டும், மீண்டும் எழுந்து வந்து இயந்திர மனிதனாக மாறி எதிரிகளை  அழிப்பார் நடிகர் அர்னொல்ட் சேவஸ்நேகர். இப்பாத்திரத்தை உருவாக்கியவர் டைட்டானிக், அவதார் போன்ற திரைப்படங்களின் தந்தை ஜேம்ஸ் கமரூன் தான். இதே போன்ற ரோபோ போர் வீரர்களை  உருவாக்கவே அமெரிக்க தீவிர முயற்சிகளை மேற் கொண்டுள்ளது.
                                  மனிதனின் விரல் துப்பாக்கியின் மீது இருந்த காலம் மாறி வருகிறது. இன்று அதே விரல் இராணுவக் கட்டுப்பட்டு அறையில் உள்ள ரிமோட் கண்ட்ரோல் மீது இருக்கப் போகிறது. ஈராக் போரில்  தொடர்ந்து ஈடுபடும் ஒரு படைவீரன் அமெரிக்க எல்லையைத்  தாண்டியதே இல்லை என்றால் நம்ப முடிகிறதா.?இது எப்படி நடக்கிறது.? அங்குள்ள படை முகாமில் இருந்து கொண்டே ஆளில்லாத விமானங்களை இயக்கிய அவன் ஏராளமான
எதிரிகளை அழித்து, தீவிரவாதிகளின் முகாம்களையும் படமெடுத்து முடித்து ஒரு சில நிமிடங்களில் தனது மகளை சிறுவர் பூங்காவுக்கு   அழைத்துச் செல்ல முடிகிறது என்றால் அதற்குக் காரணம் இந்த ரோபோ                    தொழில்நுட்பமே. இன்று வீதி ரோந்து, நேருக்கு நேர் யுத்தம், மறைந்திருந்து தாக்குதல் போன்ற அனைத்துக்கும் ரோபோக்கள்  வரபோவதாக அமெரிக்கா  கூறுகிறது என்றால்  இவர்கள் நீண்ட காலமாக இதற்கான சோதனைகளில் ரகசியமாக ஈடுபட்டு வந்திருப்பார்கள் என்பது உறுதி. இன்றைய உலக அதிசயமான இன்டர்நெட்டை இராணுவ தேவைகளுக்காக 1960ம் ஆண்டுகளிலேயே இரகசியமாகப் பயன்படுத்தியவர்கள் தான் இந்த அமெரிக்கர்கள். இதே போன்று தான் இந்த ரோபோ வீரர்கள் பற்றிய அறிவிப்புகளும் இருக்கின்றன. அமெரிக்கர்கள் மட்டும் தான் இதில் ஈடுபட்டிருக்கின்றார்கள் என்று கூற முடியாது. இந்தியா, பாகிஸ்தான், ரஷ்யா, ஜப்பான், சீனா, ஈராக் போன்ற நாடுகளும் ரோபோ வீரர்களை உருவாக்க முயற்சி செய்து கொண்டு தான் இருக்கின்றன.  ஆனால் ''உலக போலீஸ்காரன்'' அமெரிக்காதான் இவ்விடயத்தில் முன்னணியில் இருக்கிறது.,                                                                                                        ரோபோவீரர்களை   இராணுவ தேவைகளுக்குப் பயன்   படுத்துவதில் பல சாதகமான அம்சங்கள் உள்ளன. போர்வீரர்களின் மரணம், அவர்களின் குடும்பங்களுக்குரிய நஷ்ட ஈடுகள், இவற்றை எல்லாம் வைத்து அரசியல் செய்யும் கட்சிகளின் குழப்பங்கள்,  வழக்குகள், அங்கம் இழந்த வீரர்களைப் பராமரித்தல்  போன்ற பிரச்சனைகள் எதுவும் இல்லை.  ரோபோ வீரர்களுக்கு ஓய்வு, உறக்கம், உடை, உணவு, மதுவகைகள், உறைவிடம், மருத்துவ வசதி, சம்பளம் போன்ற  எதுவும் வழங்கத் தேவை இல்லை. அவற்றை எல்லாம் அவை  கேட்கவும் செய்யாது.  மேலும் அவை தனது சக ரோபோ வீரன் எதிரியின் கணைகளால் அழிந்து போனால் ஒரு நாளும் கோபம் கொள்ளது. எனவே பழிக்குப் பழி வாங்கவும் செய்யாது. பயம், களைப்பு, உயிரைக் காப்பாற்ற ஒடி ஒளிவது,  கோழைத்தனம் போன்றவையும்  நிச்ச்சயம் ரோபோ வீரர்களின்  குணங்களாக இருக்க முடியாது .
                                  அதே நேரத்தில் பாதகமான அம்சங்களும் இருக்கவே செய்கின்றன. ரோபோக்களின் கண்களுக்கு கையில் பூக்களோடும்,  முகத்தில் புன்னகையுடனும்  தன் தந்தையின் பிறந்த நாளுக்கு  வாழ்த்துச் சொல்ல ஓடோடிச்  செல்லும் 8 வயது சிறுமிக்கும், போர் டாங்கி T20 க்கும்  வேறுபாடு தெரியாமல் போய்  விடலாம். எனவே இவற்றுக்கு தெளிவான, சரியான ஆணைகளை வழங்காவிடில் மாபெரும் மனித அழிவுகள் ஏற்படுவது உறுதி.   எதிர்காலத்தில் ரோபோ வீரர்கள் தனது முடிவுகளைத் தானே எடுக்கும் அபாயமும் உள்ளது. ரோபோ வீரர்களுடன் சம்பந்தப்பட்ட கணினிகளுக்கு எதிரிகள் வைரஸ்கள அனுப்பி இவற்றை செயல் இழக்கச் செய்யலாம் என்பதும்  ஒரு பெரிய RISK தான். இவை தவிர தீவிரவாதிகளும்  ரோபோ வீரர்களை உருவாக்கத்  தொடங்கி விட்டால்  என்ன நடக்கும் என்று நான் சொல்லத் தேவை இல்லை. இராணுவ வேலை வாய்ப்புகளும் வெகுவாகக் குறையலாம். ஆயிரம் நன்மை-தீமைகள் இருந்தாலும் உலக நாடுகள் இவற்றின்  உற்பத்தியை நிறுத்தப் போவதில்லை என்பது மட்டும்  உறுதி.                                                                                                                                                                        வாகன உற்பத்தியில் சுமார் 70 சதவிகித வேலைகளை மனிதர்களிடம் இருந்து ரோபோக்கள் பிடுங்கி எடுத்து விட்டன. இந்நிலை இனி யுத்த களங்களிலும் ஏற்படத்தான் போகிறது. சொல்ல முடியாது. இன்னும் நூறு ஆண்டுகளில் ''பெரியோர்களே... தாய்மார்களே... உங்கள் பொன்னான வாக்குகளை எனக்கே அளிக்க வேண்டும்'' என்று ரோபோக்கள் தேர்தல் மேடைகளில் பேசுவதைக் கேட்க வேண்டி வந்தாலும் வரலாம்...!

Wednesday, February 26, 2014

கத்தியின்றி ரத்தமின்றி வெட்டும் மனிதர்

அண்மையில் நான் மதுரை சென்றிருந்த போது ஓய்வு பெற்ற தணிக்கைக் குழு உறுப்பினர் திரு. தியாகராஜன்  அவர்களை சந்திக்கும் வாய்ப்பு  கிடைத்தது. அவர் திரைப்படத்  தணிக்கை சம்பந்தமாக  நாம் அறியாத பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவற்றை இப்போது காண்போம். தணிக்கைக் குழுவில் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரிகள்  நிரந்தரமாகவும், இலக்கியவாதிகள், சமூக ஆர்வலர்கள், கலைத்துறையினர் ஆகியோர் தற்காலிகமாகவும் நியமிக்கப்படுவர். இக் குழுவுக்கென்று பல சட்டங்களும் விதிமுறைகளும் உண்டு. அவற்றை மாற்றவோ மீறவோ எவராலும் முடியாது. இதனால் தான் தணிக்கைக் குழுவுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதால் எதுவித பயனும் ஏற்படுவதில்லை. அருவருப்பான வசனங்களையும், அளவுக்கு மீறிய ஆபாசம், மோசமான வன்முறை தேசவிரோதச் செயல், குழந்தைகளின்  மனத்தைக் காயப்படுத்தல், பெண்களைக் கேவலப்படுத்தல், உடல் ஊனமுற்றோரைப் புண்படுத்தல், தனிப்பட்ட அவதூறுகள், குறிப்பிட்ட ஜாதி-மத-இன குழுவினரைப் புண் படுத்தல், பயங்கரமான  படுகொலைகள், ஆகியவை  சம்பந்தப்பட்ட   காட்சிகளையும், வசனங்களையும்  தணிக்கை செய்யுமாறு தணிக்கை விதிமுறைகள் கூறுகின்றன. மேலும் திரைப்படக் காட்சிகள் இந்திய அரசின் இறையாண்மை, அரசியல், பண்பாடு, நீதிமன்றங்கள், சட்டங்கள்  ஆகியவற்றை மீறாமல் உள்ளனவா என்றும் கண்காணிக்கப்படுகிறது.
                                                         ஒரு திரைப்படத்தை தணிக்கை செய்ய 4 உறுப்பினர்களை வரச் சொல்லி அவர்களுக்கு தனித்தனியே அழைப்பு அனுப்பப்படும். திரையரங்கிற்கு வந்து சேரும் வரை மற்ற உறுப்பினர்கள் யார் என்பது  அவர்களுக்கே தெரியாது. படம் தொடங்குவதற்கு 5 நிமிடங்கள் வரை என்ன திரைப்படம் என்று கூட அவர்களுக்குத் தெரிய வாய்ப்பு  இல்லை. இயக்குனரும் தயாரிப்பாளரும் அவசியம்  திரையரங்கிற்கு வெளியே காத்திருக்க வேண்டும்.படம் தொடங்கும் போது படத்தின் பெயர், நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர் பற்றிய  விபரங்களும் தணிக்கை விதிமுறைகள் அடங்கிய புத்தகமும், CUT SHEET ம் கொடுக்கப்படும். 4 உறுப்பினர்களும் நீக்க வேண்டிய காட்சிகளையும் வசனங்களையும் CUT SHEET ல் குறித்துக் கொண்டே வருவார்கள்.  இவர்கள் அங்கொருவரும் இங்கொருவருமாக தனித்தனியே அமர்ந்திருப்பதால் ஒருவர் குறிக்கும் விபரங்கள் மற்றவருக்குத் தெரிய வாய்ப்பு இல்லை.                                                                                                                                                                                    பின்னர் அனைவரும் ஒரு அறையில் கூடி தங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத காட்சிகள் மற்றும் வசனங்கள் பற்றி விரிவாகவும் ஆழமாகவும் காரணங்களோடு  விவாதிப்பார்கள். சர்ச்சை இல்லை என்றால் தயாரிப்பாளரை அழைத்து சான்றிதழை வழங்கி விடுவார்கள். சர்ச்சை இருந்தால் இயக்குனரையும் தயாரிப்பாளரையும் அழைத்து கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார்கள். படத்தின் கதைக்கும், தொடர்புக்கும் அக்காட்சி அவசியம் என்றும், தவறான உள் நோக்கத்தோடு   அமைக்கப்படவில்லை என்றும் தயாரிப்பாளர் வாதாடுவதுண்டு. அச்சந்தர்ப்பத்தில் அக்காட்சிகளை தணிக்கைக் குழு உறுப்பினர்கள்  மறு பரிசீலனை செய்வார்கள்.அனைத்து உறுப்பினர்களும் ஒப்புக் கொண்டால் மாத்திரமே அவை அனுமதிக்கப்படும். நீக்கப்பட்ட காட்சிகளுக்கு தயாரிப்பாளர் ஒப்புக்கொண்டால் அவை இடம் பெற்ற பொசிட்டிவ் மற்றும் நெகடிவ் படச் சுருள்களை  தணிக்கை அதிகாரிக்கு சமர்ப்பிக்க வேண்டும். பிறகு படத்தின் DVD யும் வசன புத்தகமும் ( CENSOR SCRIPT) சமர்ப்பிக்கப்பட்ட பிறகு சான்றிதழ் வழங்கப்படும்.  உறுப்பினர்களின் பொதுவான கருத்தின் அடிப்படையில் U (அனைவரும் பார்க்கலாம்  A (வயது வந்தவர்களுக்கு மட்டும்)  UA ( குழந்தைகள் பெற்றோருடன் பார்க்க அனுமதி) S (மருத்துவர்கள் போன்ற விசேட பிரிவினருக்கு) ஆகிய பிரிவுகளில் எது என்று முடிவு செய்யப்படும். நீக்கப்பட்ட காட்சிகளுக்கு தயாரிப்பாளர் ஒப்புக் கொள்ளா விட்டால் சென்னையில் உள்ள தணிக்கைக் சபையின் மறு பரிசீலனைக் குழுவுக்கு திரைப்படம் திரையிடப்படும். அவர்கள் சரி என்றால் சான்றிதழ் வழங்கப் படும். ஆனால் அவர்களும் ஆட்சேபணை  தெரிவித்தால் புது டில்லி யில் உள்ள TRIBUNAL குழுவுக்கு திரைப்படம் திரையிடப்படும். அவர்களுடைய முடிவே இறுதியானது, என்றார் திரு. தியாகராஜன்
                                                 இன்றைய  பல திரைப்படங்கள் தணிக்கைக் குழுவால் பார்க்கப்பட்டதா   என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு ஆபாசமும் வன்முறையும் நிறைந்து காணப் படுகின்றனவே என்று அவரிடம் கேட்டதற்கு சிரித்த திரு தியாகராஜன், கதையின் தொடர்பு பாதிக்கப் படக்கூடாது  என்ற அடிப்படையில் அனுமதிக்கப் பட்ட  ஒரு சில காட்சிகளையே  நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் எங்களால் பெரும்பாலான காட்சிகள் வெட்டி எறியப்பட்டதை நீங்கள் அறிந்திருக்க  வாய்ப்பில்லை. பெரும் செலவில் எடுக்கப்பட்ட  எத்தனையோ   காட்சிகளை நாங்கள் நீக்கியிருக்கின்றோம். வேறு வழியில்லை. நாங்கள் அனுமதி மறுக்கும் சில காட்சிகளை  புது டில்லி TRIBUNAL குழுவினர் அனுமதித்த கதைகளும் உண்டு என்று விளக்கினார்.
வெட்டப்பட்ட காட்சிகளை திருட்டுத்தனமாக இணைத்தால் என்ன நடக்கும்     என்று அவரிடம் வினவிய போது 3 ஆண்டுகள் சிறைத்  தண்டனை  அல்லது ஒரு லட்சம்  அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து வழங்கப்படும், என்றார். சில திரைப்படங்களில் இரட்டை அர்த்த வசனங்கள் அதிகம் உள்ளனவே எப்படி அனுமதிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு இவற்றை நீக்கினால் நாங்கள் இந்த அர்த்தத்தில் எழுதவில்லை நீங்கள் தான் தவறாகப் புரிந்து கொள்கிறீர்கள் என்று இயக்குனர்கள்  வாதாடுவர். இவற்றை டப்பிங் இல் மாற்றிவிடும் படி வேண்டுகோள்  விடுத்தாலும் அவர்கள் கேட்பதில்லை. ஆனால் மிக மோசமான இரட்டை அர்த்த வசனங்களை நாம் அனுமதிப்பதில்லை.  எங்களாலேயே புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு நுணுக்கமாக எழுதப்பட்ட இரட்டை அர்த்த வசனங்கள் படத்தில் இடம் பெற்ற சந்தர்ப்பங்களும் உண்டு, என்றார். 
நீங்கள் யாருடைய ரசிகர் என்று கேட்டதற்கு தணிக்கைக் குழு உறுப்பினர்கள் எந்த ஒரு நடிகருக்கும் ரசிகராக இருப்பது கூடாது என்ற எண்ணம் கொண்டவன்  நான். அப்போது தான் பாரபட்சம் இல்லாமல் இங்கே பணியாற்ற முடியும். ஆனால் சிவாஜி கணேசனின் நடிப்பு எனக்கு மிகவும்  பிடிக்கும்.           தமிழனாய்ப்  பிறந்த எனக்கு  அவரது நடிப்பு பிடிக்காமல் இருக்க முடியுமா? என்றார் திரு.தியாகராஜன். இவருடன் உரையாடி முடித்ததும் என் மனதில் தோன்றியது ஒன்றே ஒன்று தான்..இந்தியாவிலும் இலங்கையிலும்  உள்ள  ஜாதி-மத-இன வெறியர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கண்டிப்பு நிறைந்த தணிக்கைக் குழு ஒன்றை நியமித்தால் எவ்வளவு அருமையாக இருக்கும்...?!  ஆனாலும் இது கொஞ்சம் பேராசை தான்...!





Friday, February 21, 2014

போட்டியில் தொலைந்த பொட்டி

எனது மனைவி திருமதி மேனகா தயாளன் வெள்ளவத்தையின் 37வது ஒழுங்கையில் ''மேனகா பியூட்டி சலூன்'' என்ற பிரபல  அழகு நிலையத்தை நடத்தி வருகிறார். அண்மையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ''தெரண டிவி'' நடத்திய மணப்பெண் அலங்காரப்  போட்டியில் அவர் கலந்து கொண்டார். சுமார் 75 பேர் கலந்து கொண்ட அந்தப் போட்டியில் இவர் மட்டுமே தமிழர். உடன் சென்ற நானும் பார்வையாளர்களுடன்  இருந்தேன். போட்டியின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் அனைவரும் வெளியேறத்  தொடங்கினர். நாமும் வெளியேற  முற்படுகையில்  எனது மனைவியின் மேக் -அப் பெட்டி அவர் வைத்த அறையில் கணப்படாதது கண்டு அதிர்ச்சி அடைந்தோம். எம்முடன்  தொலைக்காட்சி நிறுவனத்தாரும் இணைந்து படப்பிடிப்பு அரங்கம் முழுவ தும் தேடியும்  அது கிடைக்கவில்லை. காணமல் போன பெட்டியில் சுமார் 50000 ரூபாய் பெறுமதியான அழகு சாதனப் பொருட்கள் இருந்தன. நாம் உடனடியாக அருகில் இருந்த காவல் துறை அலுவலகத்துக்குச்  சென்று முறையிடத் தயார் ஆகிவிட்டோம். எனினும் ''தெரண டிவி'' அதிகாரிகள்  ''இப்போது நீங்கள் காவல்துறை அலுவலகம் செல்லத்  தேவையில்லை. உங்கள் மேக்-அப் பெட்டிக்கு நாங்கள் பொறுப்பு. அதனை மீட்கத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் . கவலை வேண்டாம்''. என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தனர். ''நல்லா போட்டியில் கலந்து கொண்டோம்டா சாமி...!'' என்ற வெறுப்புணர்வுடன் நாங்கள்  வீடு திரும்பினோம். மறு நாள் பகல் ஒரு மணி அளவில் எங்கள்  மேக்-அப் பெட்டி கிடைத்து விட்டது என்ற நல்ல செய்தியை சொல்லி எங்கள்  வயிற்றில் பாலை  வார்த்தார்கள்  ''தெரண டிவி'' அதிகாரிகள். நாம் உடனடியாக ''தெரண'' அலுவலகம் விரைந்தோம்.  போட்டியில் கலந்து கொண்ட சக போட்டியாளர் ஒருவரே தனது மேக்-அப் பெட்டியை  வைத்து விட்டு எனது மனைவியின் மேக்-அப் பெட்டியை வேண்டுமென்றே மாற்றி  எடுத்துச் சென்றது தெரிய வந்தது.  ''தெரண டிவி'' அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன்  தங்கள் புலனாய்வுத்  திறமையையும்  பயன்படுத்தி தீவிர விசாரணைகளை  உடனடியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.  தங்களுக்கே உரிய பாணியில் அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக பெட்டியைத்  திருடிச்  சென்ற பெண் அலறியடித்துக் கொண்டு ''தெரண டிவி''  அலுவலகத்துக்கே வந்து மேக்-அப் பெட்டியை ஒப்படைக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார்.  பெட்டியை ஒப்படைக்கும் போது எங்கள்  முகத்தை நேருக்கு நேர் பார்ப்பதை அவர் தவிர்த்துக் கொண்டதை அவதானிக்க முடிந்தது. ''மன்னியுங்கள்..மாற்றி எடுத்துச் சென்று விட்டேன்..''என்று அவர் தட்டுத் தடுமாறி சமாளித்தாலும் அவரது முக பாவனையும் விழிகளும் அவரது திருட்டுத் தனத்தை அப்பட்டமாக வெளிக்காட்டின. முக்கியமாக அவரது பெட்டியும் எனது மனைவியின் பெட்டியும் நிறத்திலும் வடிவமைப்பிலும் மாறுபட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பெட்டியில் உள்ள பொருட்களை சரி பார்த்து திருப்தி அடைந்த நாம் ''தெரண டிவி''   அதிகாரிகளுக்கு பல முறை நன்றி சொல்லி விடை பெற்றோம். எனது மனைவி தமிழர் என்பதைத் அறிந்த பிறகே இவர் தனது வேலையை காட்டியிருக்கிறார் என்பதை  எங்களால்  தெளிவாக உணர முடிந்தது. ''தமிழர்கள் இளிச்சவாயர்கள்... அப்பாவிகள்..பெட்டி போனால் போகிறது'' என்று சும்மா இருந்து விடுவார்கள் என  எண்ணி விட்டார் போலும். இது போன்ற போட்டிகளில் கலந்து கொள்ளும் போது நாம் தான் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். போட்டியில் வெற்றி பெற்றால் கிடைக்கும் பரிசுகளை விட நமது பெறுமதி வாய்ந்த பொருட்களைக் காப்பற்றிக் கொள்வது தான் அதிமுக்கியமான விடயம் என்பதை  இச்சம்பவம் எங்களுக்கு உணர்த்தி விட்டது.                                         தொடர்புகளுக்கு      MENAKA BEAUTY SALON,  14 1/1,  37TH LANE, WELLAWATTE, COLOMBO-06,  TELEPHONE 0777794190