Sunday, May 13, 2012

உயிர் காத்த எங்கள் தலைமை ஆசிரியர்

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் தலைவிதியையே தலைகீழாக மாற்றியது 1983ம் ஆண்டு இனக்கலவரமாகும். அப்போது தமிழர்களின் சொத்துக்கள் எரிக்கப்பட்டன அல்லது சூறையாடப்பட்டன.ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அப்போது நான் பண்டாரவளை செந்.தோமஸ் கல்லூரியின் விடுதியில் தங்கி கல்வி கற்றுக் கொண்டிருந்தேன். தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் ஒன்றாகக் கல்வி கற்பது செந்.தோமஸ் கல்லூரியின்  சிறப்பு அம்சமாகும். (இதே சிறப்பு அம்சம் ரோயல் போன்ற வேறு கல்லூரிகளிலும் உள்ளது)  ஜூலை மாத இறுதியில்  இரண்டாம் தவணைப் பரீட்சைக்கு நானும் சக மாணவர்களும் தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்த வேளையில்  நாடு முழுதும் பற்றி எரிந்து கொண்டிருக்கும் செய்தி எம் மத்தியில் பரவத் தொடங்கியது. பரீட்சைகள் ரத்து செய்யப்பட்டு கல்லூரியும் மூடப்பட்டது. எனினும் விடுதி  மாணவர்கள் எவரும் வீடு செல்ல அனுமதிக்கப்படவில்லை. மறுநாள் திடீரென்று கல்லூரியே பரபரப்புக்குள்ளானது. காரணம் சிங்கள காடையர்கள் தமிழ் மாணவர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் ஆயுதங்களுடன் வேகமாக வந்து கொண்டிருந்தார்கள். இதனால் செய்வது அறியாது திகைத்த கல்லூரி விடுதிப் பொறுப்பாசிரியர்கள் அருகில் இருந்த மரங்கள் அடர்ந்த காட்டுக்குள் ஓடும்படி தமிழ் மாணவர்களைப் பணித்தனர். அதன்படி நாம் அனைவரும் உயிரைக் கையில் பிடித்த படி காட்டுக்குள் ஓடி ஒளிந்தோம். பூச்சிக் கடிகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு நீண்ட நேரம் காட்டுக்குள் இருந்த எங்களுக்கு நடப்பது எதுவும் தெரியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு இனி ஆபத்து இல்லை அனைவரும் விடுதிக்குத் திரும்பலாம் என்ற செய்தி வந்தது. ஆம்...! எங்கள் தலைமை ஆசிரியரான எஸ்.எல்.ஏ.ரட்நாயக்க அவர்கள் எடுத்த அதிரடி நடவடிக்கையாலும் புத்தி சாதுரியத்தினாலும் தான் அன்று நாங்கள் காப்பாற்றப் பட்டோம். சிங்கள காடையர்கள் கல்லூரியை நெருங்கியதும் வாயில் கதவை இழுத்து மூட ஆணையிட்டார்.  ''முதலில் என்னைக் கொன்று விட்டு பிறகு தமிழ் மாணவர்கள் மீது கை வையுங்கள்'' என்று நெஞ்சை  நிமிர்த்தி சீறியிருக்கிறார் அந்த வீரத்திருமகன்...! அவருக்கு பக்க பலமாக சிங்கள மாணவர்களும் ஆசிரியர்களும் துணை நிற்க சிங்கள காடையர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் பின் வாங்கிச் சென்றிருக்கிறார்கள். எஸ்.எல்.ஏ.ரட்நாயக அவர்களின் வேண்டுகோளை அடுத்து எங்கள் பாதுகாப்பிற்காக தியத்தலாவை இராணுவ முகாமிலிருந்து உடனடியாக ராணுவ வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். இன்று நான் உயிரோடு  இருந்து இந்த அனுபவத்தை எழுத முடிகிறது என்றால் அதற்குக் காரணம் எஸ்.எல்.ஏ. ரட்நாயக்க என்ற கருணை உள்ளம் படைத்த எங்கள் தலைமை ஆசிரியர் தான் என்பதில் எதுவித சந்தேகமும்  இல்லை. எங்கள் உயிரைக்காத்த அந்த வீரத்திருமகன் இன்று உயிரோடு இல்லை. அதனால் என்ன..? எம் நெஞ்சங்களில் அவர் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.                                                                                             

Tuesday, May 8, 2012

முதலாம் சந்திப்பு

இணையத்தில் உள்ள என்னைக் கவர்ந்த சில வலைப்பூக்களைத் தொடர்ந்து படித்து வருகிறேன். எனக்கும் வலைப்பூ ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற‌ ஆவல் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.எனினும் இது பற்றிய எந்த விபரங்களும் எனக்குத் தெரியவில்லை. ஒரு நாள் கூகிள் தளத்துக்குச் சென்று ''வலைப்பூ தொடங்குவது எப்படி?'' என்று  ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தேன்.வந்து விழுந்த விபரங்களோ என்னை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தின. ''சீ..சீ...இந்தப்பழம் புளிக்கும்...!'' என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு வலைப்பூ தொடங்கும் எண்ணத்தைக் கைவிட்டேன். எனினும் என்றாவது ஒருநாள்  வலைப்பூ தொடங்குவேன் என்ற‌ நம்பிக்கை எனக்கு இருக்கவே செய்தது. பிற‌கு எனது உயிரினும் மேலான‌ மனைவி மேனகா கொடுத்த உற்சாகத்தின் காரணமாக பேஸ்புக் சமூக வலையமைப்பில் எனது எண்ணங்களைச் சுருக்கமாகப் பதிவு செய்து கொண்டு வந்தேன். எனினும்  பேஸ்புக் ''பழையன கழிதலும் புதியன புகுதலும்'' என்ற கொள்கையைக் கடைப்பிடித்து வருவதால் எனது பதிவுகள் கீழே ஒடி மறைந்து கொண்டிருந்தன. இந்நிலையில் எனது உறவினரான சுதர்சினி ரமேஷ் என்னுடன் தொடர்பு கொண்டு ''உங்கள் எழுத்து நன்றாக உள்ள‌து. நீங்கள் வலைப்பூ ஒன்றைத் தொடங்கலாமே'' என்றார். ஏற்கனவே இவ்விடயத்தில் வெறுத்துப் போயிருந்த நான் ''இதற்கு எவ்வளவு செலவாகும்?''  என்று கேட்டவுடன் அவர்  சிரித்து விட்டார் .வலைப்பூவை உருவாக்க வீட்டிற்கு வரும் கணிணி நிபுண‌ரின் கட்டணம்.... வலைப்பூவிற்கு செலுத்த  வேண்டிய மாத சந்தா கட்டண‌ம்... என்றெல்லாம் கற்பனை செய்ததன் விளைவே அந்தக் கேள்வி..! ''ஒரு சதம் கூட செலவாகாது. நானே வலைப்பூ ஒன்றை உருவாக்கித்தருகிறேன். முதலில் நல்ல தமிழ்ப் பெயர் ஒன்றைத் தேர்ந்தெடுங்கள்'' என்றார்.  நான் பரிசீலனை செய்த பல பெயர்களில் வலைப்பூக்கள் எற்கனவே இருந்தன. எனவே புதிய பெயரைத் தேட வேண்டி இருந்தது. மூன்று மாத முயற்சிக்குப் பிறகு எனக்குக் கிடைத்த பெயர் தான்''தேரோட்டம்...!''  பெயரைக் கூறிய அடுத்த சில நாட்களிலேயே வலைப் பூவை உருவாக்கிக் கொடுத்து விட்டார் சுதர்சினி. தொடங்கிவிட்டது ''தயாள‌னின் தேரோட்டம்!''. இந்த வேளையில் எனது முதல் ரசிகரும், நான் சோர்ந்து போகும் போதெல்லாம் எனக்கு உற்சாகத்தை அளிக்கும் எனது மனைவி மேனகா...மற்றும் வலைப்பூவை உருவாக்கித் தந்து உதவிய  சுதர்சினி ஆகியோருக்கு எனது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஒருவரிடம் உள்ள  திறமையை இனம் கண்டு உற்சாகப்படுத்துவது மிகவும் அவசியமானது. இவ்விடயத்தில்  அனைவரும் சுதர்சினியைப் பின்பற்ற வேண்டும்...! தொடர்ந்து எனது எழுத்துக்களைப் படித்து ஆதரவு தரும் படி எனது உறவினர்கள் நண்பர்கள் மற்றும் வாசகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். நன்றி.. வண‌க்கம்...!