Friday, October 19, 2012

நல்லதை நினைப்போம், நல்லதைச்செய்வோம், நல்லதே நடக்கும்.

''கண்டி தாத்தா'' என எங்களால் அன்போடு அழைக்கப்படும் எனது பாட்டனார் திரு ரா.மு.நாகலிங்கம் ராமநாதபுரம்  மாவட்டம் பரத்தவயல் கிராமத்தில் 1923ல் பிறந்தவராவார்.1941ல் புசல்லாவை  ஜவுளிக்கடையில் சாதாரண ஊழியராக இருந்த இவர் தன் கடும் உழைப்பினால் உயர்ந்து பிரபல வர்த்தகரானார். வர்த்தகத்தோடு தன் வாழ்க்கையைச் சுருக்கிக் கொள்ளாமல் கலை இலக்கிய சமூகப்பணியிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். 1942ல் சுபாஷ் சந்திரபோஸ் பெயரில் ''நேதாஜி'' வாலிபர் சங்கத்தை தொடங்கியதே இவரது சமூகப்பணியின் ஆரம்பம் எனலாம். இச்சங்கத்தின் மூலம் மலையக இளைஞர்  விழிப்புணர்வுக்குப் பாடுபட்டார். மேலும் 1948ல் இலங்கை சுதந்திரம் பெற்ற போது அதனை தமிழ் சிங்கள மக்களின் பேராதரவோடு புசல்லாவையில்   கொண்டாடினார். மகாத்மா காந்தியின் அஸ்தி இலங்கை வந்த போது மலையக மக்கள் அதனை தரிசனம் செய்வதற்கு சகல ஏற்பாடுகளையும் செய்தவர் இவரே. 1949ல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கம்பளை மாவட்ட செயலாளராகப்  பணி புரிந்ததன் முலம் சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் இவர் போற்றப்பட்டார். பூமிதான இயக்கத்தந்தை ஆச்சாரியார் கிருபளானி, டாக்டர் சுப்பராயன், தமிழக புரட்சி இயக்கத் தலைவர்களான தோழர் ஜீவனந்தம், எஸ்.ஏ. ரஹீம் ஆகியோர் கம்பளை வந்த போது அவர்களுக்கு சிறப்பான வரவேற்பைக் கொடுத்தார். 1951ல் யாழ் நகரில் நடந்த தமிழ் விழாவில் மத்திய மாகாண  தமிழ்ச் சங்கப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1952 ல் ''கல்கி'' கிருஷ்ணமூர்த்தியின் அழைப்பை ஏற்று சென்னைத் தமிழ் விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது இவருக்கு திரு.வி.க, ராஜாஜி, தெ.போ.மீனாட்சிசுந்தரனார், போன்ற மாமேதைகளை சந்திக்கும் அரிய வாய்ப்பு கிடைத்தது.
                                                                                                                                                                                                                                                                                                                             கண்டி மாநகரின் கொடி கட்டிப் பறந்த தொழில் அதிபராக இவர் இருந்த போதிலும் ''செய்தி'' நாகலிங்கம் என்ற செல்லப் பெயராலேயே இவர் அழைக்கப்பட்டார்.
ஆம்...1960ல் கண்டியிலிருந்தும் கொழும்பிலிருந்தும் இவர் தொடங்கிய ''செய்தி'' என்ற பத்திரிக்கை ஈழத்து இலக்கிய வளர்ச்சிக்கு கணிசமான பங்களிப்பைச் செய்ததோடு மலையக மக்களின் மறுமலர்ச்சிக்கும் அரும்பாடுபட்டது எனலாம். மலையக மக்கள் மத்தியில் தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்மான உணர்வுகளை ஊக்குவிக்கக் கூடிய  கட்டுரைகளையும் எழுச்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தக் கூடிய  கவிதைகளையும் இப்பத்திரிக்கையில் வெளியிட்டார். இலங்கையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழும் மலையகத் தமிழர்களின் பிரச்சனைகளையும் அன்றாடத் தேவைகளையும் ஆராய்வதற்கு இது பெரிதும் வழிவகுத்தது. முக்கியமாக குடியுரிமைப் பிரச்சனைகள், ஸ்ரீமா-சாஸ்த்ரி ஒப்பந்தம், பற்றிய சர்ச்சைக்குரிய கட்டுரைகளை வெளியிட்டு மலையக மக்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். சுமார் 70 ஆண்டுகளுக்கு  முன்  ''நவஜீவன்'' சஞ்சிகையின் மூலம் மலையக இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய ''மலைநாட்டு காந்தி'' கே.ராஜலிங்கம் அவர்களே இவரது பத்திரிக்கை உலக முன்னோடி எனலாம். ''செய்தி''பல இலக்கிய வடிவங்களுக்கும், இலக்கிய கர்த்தாக்களுக்கும் காத்திரமான களம் ஒன்றை அமைத்துக் கொடுத்திருந்தது. இலக்கிய விமர்சனங்களும், மனோதத்துவக் கட்டுரைகளுமே செய்தியின் சிறப்பு அம்சங்களாக இருந்தன. பிரபல எழுத்தாளர் மு.தளையசிங்கத்தின் ''எழு ஆண்டு கால இலக்கிய வளர்ச்சியில் அவசர குறிப்புகள்'' என்ற தொடர் கட்டுரைகள் இன்றைய இலக்கிய ஆய்வாளர்களுக்கு முக்கிய மூலாதாரமாக அமைந்துள்ளன. கி.வா.ஜகந்நாதன், அகிலன், நாராயணதுரைக்கண்ணன், நா.பார்த்தசாரதி, கு.அழகிரிசாமி, சுகி சுப்ரமணியன், மாயாவி போன்ற தமிழகத்தின் தலை சிறந்த எழுத்தாளர்களின் ஆக்கங்களெல்லாம் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்தியில் வெளியிடப்பட்டு வந்ததே அதன் தரத்தையும் சிறப்பையும் உணர்த்துகின்றன. புதியவர்களுக்கும் இவர் வாய்ப்பளித்து மலையகத்தில் புதிய கவிஞர்களும் எழுத்தாளர்களும் தோன்றச் செய்தார். இதனால் மலையக எழுத்தாளர் மன்றத் தலைவராக இவர் நியமிக்கப் பட்டு கௌரவிக்கப்பட்டார்.  இலங்கை - இந்திய கல்விமான்களுக்கும் செய்தியின் மூலம் இவர் சிறந்த சேவைகளை ஆற்றினார். கே.சி தங்கராஜா ''ஈழநாடு'' பத்திரிகையை தொடங்கிய பொது அவருக்கு வலது கையாக  நின்ற இவர் ''ஈழநாட்டை'' மலையகமெங்கும் விநியோகம் செய்தார். இதன் மூலம் மலையக - யாழ்ப்பாண நட்புறவுப் பாலத்தை முதலில் அமைத்த பெருமைக்குரியவரகவும் திகழ்ந்தார்.

பத்திரிகையோடு மாத்திரம் இவரது பணி நின்று விடவில்லை. பல்வேறு நூல்களையும் பதிப்பித்து வெளியிட்டு வந்தார். ''அகஸ்தியர் பதிவுகள்'' , ''எரி  நெருப்பில் இடைபாதை இல்லை''  மற்றும் புகழ் பெற்ற கவிஞரும் தொழிற் சங்கத் தலைவருமாகிய சி.வி.வேலுப்பிள்ளையின் ''தேயிலைத் தோட்டத்திலே'', கவிஞர் சில்லையூர் செல்வராஜனின் ''தணியாத தாகம்'' ஆகிய நூல்கள் இவரது வெளியீடுகளில் குறிப்பிடத்தக்கவை. இவர் இன்றும் கவிதா பதிப்பகம் என்ற நிறுவனத்தின் மூலம் பல்கலைக்கழக ஆய்வாளர்களின் ஆக்கங்கள் உட்பட பல நூல்களை வெளியிட்டு தமிழ் இலக்கியத்தின் செழுமைக்குப் பங்களிப்பு செய்து வருகிறார். பத்திரிகைத் துறையின் மூலம் இவர் ஆற்றிய கலை இலக்கியப் பணி இவருக்குப் பெயரைத் தந்ததோடு சான்றோர் பலரின் அன்பையும் நட்பையும் பெற்றுத் தந்தது. 1960ல் பாவேந்தர் பாரதிதாசனை சந்தித்தது முதல் அவர் மறையும் வரை இருவருக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. திரைப்பட  உலகைச்சேர்ந்த டி.கே.எஸ்.சகோதரர்களான பகவதி, சண்முகம் ஆகியோரும்  இவரது நண்பர்களே. தமிழ்ப் பேரறிஞர் வண. தனி நாயகம்  அடிகளோடு பல்வேறு சந்தர்ப்பங்களிலும் இணைந்து பணியாற்றிய பெருமையும் இவருக்கு உண்டு. இவரோடு இணைந்து முன்னாள் இந்திய ஜனாதிபதி தத்துவ ஞானி இராதாகிருஷ்ணனை சந்தித்ததை தனக்குக் கிடைத்த பெரும் பேறாகவே இவர் கருதுகிறார். தமிழ் அறிஞர் ம.பொ.சிவஞானம் இலங்கை வரும் போதெல்லாம் கண்டியிலுள்ள இவரது வீட்டில் தான் தங்குவது வழக்கம். தமிழ் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவுக்கு சிறப்பு மலர் வெளியிட்டு மாபெரும் விழா  கொண்டாடினார். மகாகவி பாரதியாருக்கு ஆண்டு தோறும் கண்டி மாநகரில்  விழா  கொண்டாடி மகிழ்ந்தார். சிறுகதை மன்னன் புதுமைப்பித்தனுக்கும் விழாக் கண்டார். 1966ல் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதனுக்கு நடைபெற்ற மணி விழாவை கண்டியில் இரு தினங்களுக்கு கொண்டாடிய இவர் அதை ஒட்டிய மணிவிழா மலர் ஒன்றை ''செய்தி'' பத்திரிக்கை மூலம் வெளியிட்டார். கி.வா.ஜகந்நாதன் இவருக்கு அனுப்பிய கடிதத்தில் 
                                                              பாகு தின்ற தெனப் பேசும்
                                                             பண்பாளச் செம்மை
                                                             நாகலிங்கம் காட்டும்
                                                             நயம் கண்டேன்  தாகமுறும்
                                                            அன்பு கண்டேன்  வாழ்க 

என்று குறிப்பிட்டிருப்பதை இன்றும் பெருமையோடு நினைவு கூர்கிறார். கிரிக்கெட் வீரர் முரளிதரனின் தந்தை முத்தையா அவர்களும் இவரது நீண்ட நாள்  நெருங்கிய நண்பராவர். அந்த நட்பை மறவாத இவர் சென்னையில் இடம் பெற்ற முரளிதரனின் திருமணத்தில் முதல் நபராகக் கலந்து கொண்டார். 1983ல் இடம் பெற்ற பயங்கர இனக்கலவரம் காரணமாக இவர் கண்டியில் இருந்து மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அப்போது இவர் தனது வாழ் நாள் முழுதும் சேகரித்து வைத்திருந்த ஆயிரக் கணக்கான புத்தகங்களை மலையகப் பாடசாலைக்கு நன்கொடையாக வழங்கியதே இவரது தொண்டு உள்ளத்தைப் பறை சாற்றுகிறது. இந்தியா, இலங்கை,மலேஷியா, உட்பட உலகெங்கும் வாழும் தமிழறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்களுடன் இன்றும் இறுக்கமான நட்புறவுகளைக் கொண்ட இவர் அது பற்றி  எதுவும் அலட்டிக் கொள்ளாமல் மிக அமைதியாகவும் அடக்கமாகவும் இருந்து மக்கள் பணியாற்றி வருவதே இவரிடம் காணப்படும் அற்புத குணாம்சமாக இருக்கிறது. நான்  எதாவது சாதனை செய்திருந்தால் அந்தப்பெருமைக்குரியவர் எனது அருமைத் துணைவியார்  இந்திராணி அம்மையார் தான் என்று பணிவோடு கூறும் இவர் 90  வயதை நெருங்கிய நிலையிலும் பேச்சு, செயல், உடல்நலம், நடை உடை பாவனைகளில் துடிப்புள்ள இளைஞனாகவே காட்சி தருகிறார்.  ''நல்லதை  நினைப்போம், நல்லதைச் செய்வோம், நல்லதே நடக்கும்'' என்ற தாரக மந்திரத்தையே உறுதியாக நம்பும்  ''கண்டி தாத்தா'' ரா.மு. நாகலிங்கம் அவர்கள்  நூறு ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து தனது சமூக இலக்கியத் தொண்டுகளை தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன். வணங்குகிறேன்.